Monday, December 30, 2013

மார்க் போடு ! கொண்டாடு !!


தங்க மீன்கள், 
ஓநாயும் ஆட்டுக் குட்டியும் 
மற்றும் 
மூடர் கூடம் திரைப்படங்களை முன்வைத்து . . .

                                            -சுரேஷ்வரன்-

ஸ்வரன் : 

மாற்று ஊடக முயற்சி என்கிற அடிப்படையில் கொண்டாடப்பட்டு வரும் திரைப்பட வரிசையில் தற்போது  தங்க மீன்கள், ஓநாயும் ஆட்டுக் குட்டியும் மற்றும் மூடர் கூடம் ஆகிய மூன்றும் சேர்ந்திருக்கிறது. இந்த சமீபத்திய வரவுகள் குறித்ததுதான் நமது தற்போதைய உரையாடல். 

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த கருப்பொருள்களான காதல், கிச்சுசிச்சு மூட்டல்கள், ஹீரோயிஸம், குத்தாட்டம் என்பது தவிர்த்த முயற்சிகள் மாற்று திரைப்பட முயற்சியாக இங்கு பார்க்கப்படுகிறது. மாற்று என்பது உங்கள் பார்வையில் எது ?

முருகன் : 

தமிழ் சினிமாவின் கெட்டிதட்டிப்போன நீங்கள் குறிப்பிட்ட பாதையிலிருந்து விலகிய நிலையில் ஒரு திரைப்படம் எடுப்பதற்கு உள்ளபடி ஒரு துணிச்சல் வேண்டும். அத்துணிச்சலோடான முயற்சிகளை ஒரு மாற்றாகத்தான் பார்க்கிறேன். அவ்வகையில் நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிற மூன்று படங்களிலும் காதல் என்பது மையப்பொருளாக இல்லை. தந்தை மகள் பாசம், மனித நேயம், உறவு முறைகளுக்கிடையிலான சிக்கல்கள் போன்றவைகளின் மீது கவனக் குவிப்பாக அவை உள்ளமை ஒரு மாற்றாகத்தான் எனக்குப்படுகிறது.
மனவாசி : தந்தை, மகளுக்கிடையிலான பாசத்தை அழுத்தமாய்ப் பதிவு செய்திருக்கிற ‘தங்கமீன்கள்’ தமிழ் சினிமாவின் உச்சம் என்கிற அளவில் நிகழ்ந்து வரும் கொண்டாட்டத்தில் உங்கள் குரலும் கேட்கிறது. நானும் ‘தங்க மீன்கள்’ திரைப்படத்தை தமிழ்த் திரையின் உச்சமாகவே பார்க்கிறேன். ஆனால் ஒரு சிறு வித்தியாசம்... தங்க மீன்கள் தமிழ் மெலோ டிராமாவின் உச்சம் ! காதல் தவிர்த்த மற்ற உறவு நிலைகளை தமிழ் சினிமா இது வரைக்கும் பேசியதே இல்லை என்பதில்லை. நிறையப் பேசியிருக்கிறது. யதார்த்தம் என்பதுதான் மிஸ்ஸிங் இதுவரைக்கும். அந்த வகையறாவில்தான் தங்க மீன்களையும்  என்னால் வைத்துப் பார்க்க முடிகிறது. ஒரு மாற்றாக அல்ல !

முருகன் : 

யதார்த்தம் என்பது பாத்திர வார்ப்புகளில் போதுமான அளவில் இருப்பதாகவே கருதுகிறேன். கல்யாணியின் மனைவி வடிவு, அவனது தாய் தந்தை என்று பல கதாபாத்திரங்கள் யதார்த்தம்தான் !

மனவாசி : 

கல்யாணியின் மனைவி வடிவு, அவனது தாய் தந்தை, முதலாளி, நட்பு,  எவிட்டா மிஸ், ஸ்டெல்லா மிஸ், செல்லம்மா போன்ற பாத்திர வார்ப்புகளில் இருந்த யதார்த்தம் கல்யாணி ( ராமின் ) பாத்திர வடிவமைப்பு பெற்ற மையத் தன்மையால் பலனற்றுப் போயிருக்கிறது. பாலு மகேந்திரா ‘நீங்கள் கேட்டவை’ என்ற பெயரில் தனது கோபத்தைத் திரட்டி தமிழ்த் திரை இரசிகர்களின்மீது தூக்கி எரிந்தது போல ‘’தங்க மீன்கள்’’ தமிழ் சினிமா இரசனையின் மீதான ராமின் கோபமாகவே எனக்குப்படுகிறது. ‘’எமோஸனக்கொற  எமோஸனக்கொற’’ என்பது படம் பார்க்கும்போது உள்ளூரக் கேட்ட கமெண்ட் ! 

ரத்னவேல் : 

செல்லம்மா கல்யாணிக்கு உடல் நலன் சரியாயில்லை என்பதை அறிந்து, பழங்களை எடுத்துக்கொண்டு அவனைப்பார்க்க யாரிடத்தும் சொல்லிக்கொள்ளாது கிளம்பிய செய்தி கேட்டு கல்யாணி கதறி அழும் காட்சி சற்று நாடகார்த்தமானதுதான் என்றாலும் ‘’அப்பா இதுவரைக்கும் உனக்கு ஒன்னுமே செய்ததில்லையேமா, ஸ்கூல் ஃபீஸ் கூட கட்டலியேமா, எனக்கு என்னப் பிடிக்கல’’ என்று அரற்றுவது தனது பொறுப்பற்றத் தனத்தை அவன் உணர்ந்தேதான் இருக்கிறான். ஆனால் அதனை அடுத்தவர் சுட்டிக்காட்டும்போது கோபம் கொள்கிறான். அவன் அப்படித்தான் என்பதாய் இருக்கிறது அந்த பாத்திர வார்ப்பு. அந்தப் பாத்திரம் கூட ஓரளவு இயல்பானதாகத்தான் இருக்கிறது.

மனவாசி : 

அதனை அடுத்து அவன் தீர்மானிப்பது செல்லம்மா கேட்ட வோடா ஃபோன் நாய்க்குட்டியை அவளுக்கு வாங்கிக் கொடுப்பது என்று. தொலைக்காட்சியில் காட்டப்பட்ட நாய்க்குட்டியைப் பார்த்து கேட்டதல்ல அது. பொம்மை நாய்க்குட்டியை விளையாடுவதற்கு தராததிற்கு செல்லம்மா சொன்ன கதையை நிஜமாக்க கல்யாணியின் போராட்டம் என்று அதற்கு அடுத்து ஒரு ஆரம்பம்.  உள்ளபடி எனக்கு வோடா ஃபோன் நாய்க்குட்டிக்கான போராட்டம் வலிந்து திணிக்கப்பட்டதாகவே படுகிறது.   அதனைக் கேள்வி கேட்க, பாசக்கார அப்பா உனக்கு ரோசம் அதிகமே அதிகம்டா !

சதீஸ் : 

நலிந்து வருகிற சிறுதொழில்கள், விளம்பரப் படங்களின் ஆதிக்கம், கல்வி தனியார் மயமாதல்  என்று பல அவசியமான விசயங்கள் பற்றி பேசி இருக்கிறது இந்தப் படம். அந்த வகையில் இந்தப்படம் ஒரு மாற்றுதான் !

மனவாசி : 

இவ்வளவு அரசியல் பேசும் பாத்திரம் பழங்குடிச் சமூகத்தின் அடையாளம் ஒன்று, நம்பிக்கை ஒன்று  விற்பனைக்குப் போக பாசத்தின் அடிப்படையில் அதற்குத் துணைபோகிறது. கல்வி முறை குறித்தான படம்தான் இதுவெனில் அது அப்படியும் இல்லை. சாட்டை, தாரே ஜமீன் பர் என இதற்குமுன் அந்த விஷயங்கள் வெகு அழுத்தமாக சமீபத்தில் பேசப்பட்டுள்ளன. பல விஷயங்களையும் ஒரே படத்தில் பேச முற்படுவது ராமுவுக்குப் புதிதல்லவே ! கற்றது தமிழில் ஒரு கதாபாத்திரமாகவே செயல்படும் நிலவியல் போன்றதல்ல தங்க மீன்களின் பசுங்காடு ! வெற்று அழகியலும் வேலைக்காகாது.

அதேவேளை, வடிவு கல்யாணியிடம் ரயில்வே டிராக் ஓர திண்டில் அமர்ந்து செல்லம்மா மந்தம் என்று சொல்ல, கல்யாணியின் மனக் கொந்தளிப்பை இரயிலின் கடப்போடு இணைத்தது அழகியல்தான் ! ரயிலின் கடப்பு ஒலி போலவே, கப்பல் மற்றும் விமானத்தின் ஒலிகளும் மனச் சூழலோடு பொருந்திப் போவதும் அழகானதுதான். இப்படியான ஆக்கங்கள் அதில் இல்லாமல் இல்லை. ஆனால் அழகியல் மட்டுமே கூட எனக்குப் போதுமானதாயில்லை !

நிவேதிதா : 

மனித உறவுகள் குறித்து பேசுவது அரிதாகிவிட்டிருக்கிற தமிழ்த் திரைச் சூழலில் இப்படியான முயற்சிகளை இவ்வளவு காட்டமாகத்தான் அணுக வேண்டுமா ?

மனவாசி : 

கல்யாணியைத் தவிர்த்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் தெரிகிறது ஒரு குழந்தைக்குமுன் என்ன பேசவேண்டும் என்ன பேசக்கூடாது என்று. கல்யாணி உள்ளபடி ஒரு அதி பாசக்கார அப்பாவாக இருக்கிறான். ஆனால் பொறுப்பான அப்பாவாக இல்லை ! அவனது பொறுப்பற்றத்தனம் குழந்தையை திருடச்செய்கிறது. தொலைக்காட்சித் தொடர் அதற்கு தூண்டலாய் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. குளத்தில் இறப்பவர்கள் தங்க மீனாவார்கள் என்கிற கல்யாணியின் கதை செல்லம்மாவைவிட கல்யாணியையே மிகு குழந்தையாக்கிக் காட்டுகிறது. என்னோட கதையைக்கேட்டு அவள் செத்தால் செத்துவிட்டுப்போகட்டும் என்பது குழந்தைமையின் உச்சம் ! இத்தகைய முயற்சிகள் வெகு ஆபத்தானவை என்று சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை.

நிவேதிதா : 

எதிர்மறை விமர்சனம் வைப்பது பிறரது கவனத்தை ஈர்ப்பதற்கானதாகவேபடுகிறது. மாற்று என்பது உடனே நிகழ்ந்து விடுவதல்ல. அதுவொரு தொடர் முயற்சியின் விளைவு. அந்த அடிப்படையில் தங்க மீன்கள் முக்கியத்துவம் உடையதாகத்தான் நான் நினைக்கிறேன்.

மனவாசி : 

மாற்று என்ற பெயரில் வருவனவற்றையெல்லாம் அதற்காய் கொண்டாடித் தீர்க்கவேண்டும் என்பதில்லை. விமர்சனம் வேண்டும். விமர்சனம் என்பதும் மாற்றை நோக்கியதுதான். சற்று கடினமான பார்வையோடு நானிருப்பதாகப்படுவது எனக்குப் புரியாமலில்லை. தங்க மீன்களைக் கொண்டாட எனக்கிருக்கும் காரணம் வேறு. நல்லாசிரியை என்பதை உணர மனம் மாறுகிறான் எவிட்டா மிஸ்ஸின் கணவன். ஒரு காட்சியே போதுமானதாயிருந்தது இராமிற்கு. அழுத்தமான பதிவு அது. தங்க மீன்கள் எனக்கு ஒரு குறும்படமாக இருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அந்தவொரு பகுதிக்காகவேணும் உங்களின் கொண்டாட்டங்களில் பங்கெடுத்துக்கொள்வதில் எனக்கு ஒரு சிறு சந்தோஷம்தான். ஆனால் கல்யாணி இரவு நேரத்தில் எவிட்டா மிஸ்ஸை முதல் முறையாய்ப் பார்க்கும்போது அவர்களது தோற்றத்தை வைத்து ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதைக் கூட புரிந்துகொள்ளாது தன் மகளோடு அவர்களை பேசச் சொல்வதுதான் கல்யாணியின் பாசத்தின் உச்சம் !

படம் முழுவதும் அரசியல் பேசி, அன்பு பேசி நல்ல தகப்பன் கல்யாணி என்பதை நிறுவத்துடித்து, தலையில் அடித்து அழுது, அடி வாங்கி, வழுக்கி விழுந்து,  காலில் விழுந்து என்று... மன்னிக்கவும்.  ‘’கல்யாணி ரொம்ப நல்லவன்டி. அவன் கொஞ்சம் கெட்டவனாகத்தான் திரும்பி வரட்டுமே’’ கொஞ்சம் கெட்டவனாகிவிடுங்கள் கல்யாணி. ‘’அது என் அண்ணன் வாங்கிக் கொடுத்தது. எனக்கும் கொஞ்சம் கொடு. Deal ? ‘’ கோபத்திற்குப் பின்பு அன்பு இருக்கிறது ! அது கல்யாணியின் கோபத்திற்கு பின்பு மட்டுமேயல்ல ! முடியல. ப்ளீஸ்.... ஆனந்த யாழில் எனக்கான இசையை மீட்டிக்கொண்டு தங்க மீன்களிடமிருந்து சற்றே விடுபட்டு ஆசுவாசம் கொள்ளலாமா ?

முருகன் : 

கொல்லப்போறேன் உன்னை. ஆசுவாசம் என்பது அடுத்த படைப்பு ! ஓநாயும் ஆட்டுக் குட்டியும். ஒவ்வொரு ஃப்ரேமும் கற்றலுக்கானது என்று யாரோ சொல்லியதாகக் கேள்வி.

மனவாசி : 

உள்ளபடி அது உண்மைதான். மாற்று என்கிற குரலோடு வருபவைகளை சற்று கவனத்தோடுதான் அணுகுகிறேன். அந்த வகையில் இந்தப்படம் எடுத்துக்கொண்ட கருவால் என்னை வெகுவாய் பாதித்தது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.

முருகன் : 

இந்த அளவில் இது நல்ல துவக்கம்தான்.

மனவாசி : 

உண்மைதான். ஆனால் இன்னமும் நான் முடிக்கவில்லை. இடைவேளை வரைக்கும் என்னை பெரிதாய் சோதித்த படம் இது. இருந்தும் மிஸ்கின் என்பதால் சற்று பொறுமைகாத்தேன். படம் முடிகிற தருவாயில் மெழுகுவர்த்தியோடு உருகி உருகி ஒரு கதை சொல்கிறார் மிஸ்கின். அதுவரைக்குமான காத்திருப்பு அயர்ச்சியாகி விட்டது. காட்சி ஊடகத்தில் உருக்க உருக்க ஒரு கதை சொல்லல் ! தன் பங்கிற்கு இதில் இளையராஜா வேறு. என்ன ஆயிற்று தமிழ்த்திரைக்கு ? நிர்வாணக்காட்சி, நிலம் பார்த்தபடியே நகர்வுகள், அடிதடிகள், அசையாது நிற்றல் என்று மாற்று பிரமாதம் !

நிவேதிதா : 

அடியாளின் மன உறுத்தலும் அதற்கான அவனது பிராயச்சித்தமும் அனேகமாய் இதுவரைக்கும் பேசப்பட்டிராத ஒன்று என்றே தோணுகிறது.

மனவாசி : 

பிராயச்சித்த வகையறாக்கல் நிறைய உண்டு என்றாலும் இது சற்று மாறுபட்டதுதான்.

முருகன் : 

‘’குத்துப்பாட்டு தவிர்த்து எடுத்து குத்துப்பட்டிருக்கிறார் மிஸ்கின். போஸ்டரும் பசையுமாய் தமிழகம் முழுவதும் அலைகிறார். பாட்டு இல்லாமல் ராஜாவா ? ‘’ என்று பலகுரல்கள் !

மனவாசி : 

பாட்டு மட்டுமே ராஜா அல்லவே !  ரீ-ரிக்கார்டிங்... அதில் ராஜாவல்லவா நம் ராஜா ? என்ன பின்னணி இசை அமைப்பதற்கு பதிலாய் முன்னணி இசையை அமைத்துவிட்டார். ரொம்பவும்தான் துருத்தல் ! கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள்.

முருகன் : 

இத்தகைய கதைக்கு இசை வெகு அவசியம். இசையற்று இப்படத்தைப் பார்ப்பது என்பது திரை அனுபவமாயிராது.

மனவாசி : 

உண்மைதான். இசை என்பதில் நிசப்தமும் சேர்த்திதான் ! அதனைத் தேடவேண்டி இருக்கிறது. இரவு சுவர்க்கோழிகள் சென்னையில் ஒட்டு மொத்தமாய் மிஸ்கினின் துப்பாக்கியால் அறியாது சுடப்பட்டுவிட்டன போலும். பத்தாதிற்கு ரோஷமானின் இசைக்கோர்வைகள் ராஜாவால் மீட்டெடுக்கப்பட்டது நிச்சயம் மாற்று என்கிற தலைப்பின் கீழ் நாம் கொண்டாடப்பட வேண்டியதுதான்.

ரத்னவேல் : 

இசை மட்டுமல்ல படமே சுடப்படுவதும் அவை பிரபல இதழ்களால் மாற்று என்று கொண்டாடப்படுவதும் சகிக்கவில்லைதான்...

நிவேதிதா : 

பழகிக் கொள்ளவேண்டும் போல் இருக்கிறது. அட்டாக் த கேஸ் ஸ்டேசன் தமிழ்ச் சூழலிற்கு ஏற்ப மூடர் கூடமாகி இருக்கிறது. மூடர் கூடம் என்று யாரைச் சுட்டுகிறார்கள் என்று உள்ளபடி எனக்குப் புரியவில்லை.

சதீஸ் : 

மாற்று ஊடக முயற்சி என்பது  சன்னமாகத் துவங்கி தற்போது வலுப்பெற்று உரத்த தொனியில் ஒலித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அக்குரலையும் தன்னுள் இழுத்துக்கொண்டு  அதனையே வணிகத்திற்கான விளம்பரச் சொல்லாக அடையாளப்படுத்திக்கொண்டு அப்பட்டமான ஈயடிச்சான் காப்பிப் படைப்புகள் மாற்று ஊடக முயற்சி என்று வெளிவருவது ஒரு தேர்ந்த வணிக உத்திதான் !

ரத்னவேல் : 

இதுதான் மாற்றா.....?? மாற்று என்கிற பெயரில் நிகழும் அபத்தங்களுக்கு மத்தியில் வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள் சற்று மேல்தான் .

மனவாசி : 

மார்க் போடு ! கொண்டாடு !!

                

                      நன்றி : நிழல் - நவீன சினிமாவிற்கான இதழ்