Tuesday, November 12, 2013

திரையும் இலக்கியமும்




                                                                     - சுரேஷ்வரன் –


1913, மே 3, உயிர்த்த இந்திய சினிமாவுக்கு இவ்வாண்டு 100-வது ஆண்டு ! இன்றைய முழுநீளத் திரைப்படங்களின் முன்னோடிப்படமான ‘ராஜா ஹரிச்சந்திரா’ தாதா சாகேப் பால்கே அவர்களால் தயாரித்து இயக்கப்பட்டு அன்றைய தினத்தின் மாலை 6 – 7.30 மணிக்குத் திரையிடப்பட்டது. அதனை நினைவு கூறுமுகமாய் தமிழக அரசு தென்னிந்திய திரைப்பட வர்த்தகக் கழகத்துடன் இணைந்து இந்திய சினிமாவின் இந்நூறாமாண்டுக் கொண்டாட்டத்தை குத்தாட்டம்போட்டுத் தீர்த்தாகியும்விட்டது. கொண்டாடுவதற்கான கடப்பாடு தென்னிந்திய திரைப்பட வர்த்தகக் கழகத்துக்கு ஈடாக தமிழக அரசிற்கும் நிச்சயம் உண்டு. 5 முதல்வர்களும் இன்னமும் முதல்வர் கனவோடிருக்கும் அனேகரும் திரைத்துறையின் நட்சத்திரங்களல்லவா ?  

சினிமா பெருவாரியான மக்களை எளிதாகச் சென்றடைவதற்கான சரியானதொரு ஊடகம். அதனை அரசியல் கட்சிகள் உட்கிரகித்துக் கொண்டதைப் போலவே, வியாபாரிகளும் உட்கிரகித்துக்கொள்ள, இலாப வேட்டைமட்டுமே சினிமாவின் ஆகச்சிறந்த நோக்காகிவிட்டது பெருந்துயரம்தான் ! உள்ளபடி கலை கலைக்காக, கலை மக்களுக்காக என்றெல்லாம் இங்கொன்றும் இல்லை. கலை காசுக்காக என்பதே திரையின் தாரக மந்திரம் !  

இருந்தும் இப்பெருமக்களுக்கான ஊடகத்தை கலை நேர்த்தியோடும் மக்கள் நல நோக்கோடும் கையாண்ட வெகு சிலராலேயே திரை மற்ற கலைச் செயல்பாடுகளுக்கிடையில் தனக்கான தனித்ததொரு அடையாளத்தை அடைந்திருக்கிறது. இத்திசை வழியிலான முயற்சியை முன்னெடுத்த கலைஞர்கள் உலக அளவில் கணிசமானோர்தான். அக்கணிசத்தில் இந்திய அளவில் எத்தனை பேர், இந்தியாவின் மொழிவாரியான மாநிலங்களலவில் எத்தனை பேர் என்கிறதொரு கேள்வியை எழுப்பிக்கொண்டு உற்று நோக்க, இங்கு பண்டங்களின் குவியல் பெருமலை போல எனில், படைப்புக்களின் குவியலோ ஒரு சிறு குன்றளவிற்குக்கூட இல்லை ! பெருத்த அயர்ச்சிதான் ! அதுவும் குறிப்பாக வங்காள, மராட்டிய, கேரளத்து பங்களிப்புகளோடு ஒப்பிட, தமிழகத்தின் பங்களிப்பு போதிய அளவில்கூட இல்லை என்பதே நிதர்சனம். நல்லவேளையாக மாற்றுத்திரை நோக்கிய குரல்கள் தமிழ்ச் சூழலில் சற்று உரக்க தற்போது ஒலிக்கத்துவங்க, அதுகொண்டு சில படைப்பாக்க முயற்சிகள் நடந்தேறுவது நம்பிக்கைகொள்ள வைக்கிறது. 

இந்திய அளவில் மத்திய மாநில அரசுகளின் நூறாமாண்டுக் கொண்டாட்டங்களில் வசூலை வாரிக்குவிக்கும் படங்கள் நல்ல படங்கள் என்கிற கண்ணோட்டத்திலிருந்து மாறுபட்ட, ‘ஒரு கலைப்படைப்பின் ஆகச்சிறந்த பணி என்பது ஆத்ம சுத்திகரிப்பே’ என்கிற வகையில் உன்னதமான படைப்பாக்க முயற்சிகளை மேற்கொண்ட முன்னோடிகளையும் அவர்கள்தம் படைப்புக்களையும் நாம் கவனப்படுத்தி இருக்கவேண்டும். அத்தோடு, அவர்கள்தம் திசைவழியில் நம்பிக்கையோடு பயணிக்க போதிய அங்கீகாரத்தையும் ஊக்கத்தையும் இன்றைய திரைக்கலைஞர்களுக்கு அரசு தம்மளவில் அளித்திருக்கவும் வேண்டும். அது நிகழவில்லை. அவ்வாறு நிகழ்வதற்கான அழுத்தம் கலை இலக்கியத் தளங்களிலிருந்து எழுந்திருக்க வேண்டும். அதுவும் எழவில்லை. துரதிருஷ்டம்தான் ! நமக்கு விமர்சனம் என்கிற பெயரில் நல்ல முயற்சிகளை காயடிக்க மட்டும்தான்  தெரியுமோ என்று சுயகேள்வியொன்றை கலை இலக்கியக் கலகக்காரர்கள் தமக்குள் எழுப்பிக்கொண்டாகவேண்டிய காலகட்டம் இது ! 

இப்படியான நடப்புப் பின்னணியில் மத்திய அரசின் சாகித்திய அகாதெமி தனது இலக்கியத் தளத்திலிருந்து திரையின் மீதும் தனது கவனத்தைத் திருப்பி இருப்பது, அதுவும் தமிழ்ச் சூழலில், மிகுந்த காலதாமதத்திற்குப் பிறகானதுதான் எனினும் பெரிதும் வரவேற்பிற்குரியது  ! கடந்த செப்டம்பர் மாதம் 20 மற்றும் 21 திகதிகளில் ‘தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம்‘ என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கை சாகித்திய அகாதெமி நிகழ்த்தியது. இலக்கியத்திற்கும் திரைக்குமான இணக்கத்தையும் பிணக்கத்தையும் கவனப்படுத்தி, இரண்டிற்குமிடையே ஒரு உரையாடலை அது முன்னெடுத்திருக்கிறது. குத்தாட்டக் கோலாகலத்திற்கிடையே அக்கருத்தரங்கு சற்று ஆசுவாசப்படுத்தக் கூடியதாய் இருக்கிறது.  
  
இலக்கியமும் திரையும் அதனதன் அளவில் தனித்துவமானவை. எழுத்து மொழியும் காட்சி மொழியும் இருவேறு அடிப்படைகளில் இயங்குபவை.  எனினும் வாழ்வின் யதார்த்தம் என்பது இரண்டிற்கும் ஒன்றுதான். யதார்த்தத்தின் ஆழ அகலங்களில் பெருமீனென நீந்தும் எழுத்து கண்டு சொன்னவை இலக்கிய உச்சங்கள் ! எண்ணிக்கையில் அது கூடத்தான். காட்சியோ ஆகாயத்தில் மினுங்கும் நட்சத்திரங்களை மீன்களென எண்ணித் தூண்டில் போடும் கற்பனையில் தன்னை ஆழ்த்திக்கொள்ள, திரை கனவுத் தொழிற்சாலையாகி விட்டிருக்கிறது. யதார்த்தத்தில் காலூன்றிய திரை ஆக்கங்கள் குறைவுதான். இந்தளவில் இலக்கியம் திரைக்கு எந்தளவில் தனது பங்களிப்பை நிகழ்த்த முடியுமெனில் கதை என்கிற கூறுதான் முதலில் கவனத்திற்கு வருகிறது.

இலக்கியத்தையும்   திரையையும் இணைக்கும் பாலம் என்பது திரைக்கதை ! கதையைச் சொல்லுவது இலக்கியம், அதுவே காட்டுவது திரை என்றாகிறது. எழுத்துப் பதிவைக் காட்சிப் பதிவாக்கும்போது திரைக்கலைஞன் எதிர்கொள்ள நேரும் சவால்கள் பல. இலக்கியம் என்பது எழுத்தறிவு பெற்ற மக்கள் சமூகத்திற்கானது. திரை அனுபவம் என்பது அனைவருக்குமானது. இலக்கியப் பிரதியை தேவையெனில் நிறுத்தி நிதானமாய் வாசித்துக்கொள்ள முடியும். திரை அனுபவம் என்பதோ காட்சிகளின் தொடர் ஓட்டத்தால் மட்டுமே சாத்தியப்படக்கூடியது. குறிப்பிட்ட காலவரையறைக்குள் அந்த அனுபவத்தை பார்வையளனுக்குள் கடத்தியாக வேண்டியிருக்கறது. அதற்காய் அவனது கவனத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முனைகிறது திரை. காட்சிப்பூர்வமாய்க் கதையைச் சொல்வதில் அது பல்வேறு உத்திகளைக் கையால்கிறது. தனித்தனியான சொற்களை குறிப்பிட்ட வரிசையில் வைக்க அது முழுமையானதொரு அர்த்தத்தைத் தருவதுபோல, செறிவான காட்சித் துண்டுகளை இணைத்து அர்த்தத்தை, உணர்வை, அனுபவத்தைக் கட்டியெழுப்ப முனைகிறது அது. திரைமொழி செறிவுறுகிறது !  

கதை என்பது பொதுவாக சம்வங்களின் கோர்வை ! ஒரு சிறுகதையை முழுநீளத் திரைப்படமாக்குவதற்கு சம்பவங்களை சேர்க்க வேண்டியிருக்கிறது. அதேபோல் ஒரு நாவலைத் திரைப்பதிவாக்க சம்பவக் குறைப்பும் சேர்ப்பும் நிகழ்வதற்கான சாத்தியப்பாடு அதிகம்தான். சமயங்களில் கதையின் கதாபாத்திரங்களும் குறைப்புக்கும் புதிதான சேர்ப்புக்கும் ஆளாவதுண்டு ! ஒரு எழுத்துப் படைப்பு இயக்குநர் வழி மறு ஆக்கத்திற்கு உள்ளாகும்போது இத்தகைய மாற்றங்கள் தவிர்க்க முடியாததாகிறது. ஆயிரம் சொற்களால் விவரித்துச் சொல்லப்பட்ட ஒரு தெருமுனையை, ஒரு காட்சித்துண்டு அழுத்தமாய் ஒரு சில வினாடிகளில் நம்முன் நிறுத்திவிடும். இது திரையின் ஆகப்பெரும் சாத்தியம் எனில், சொற்களுக்கு மட்டுமே சிக்கும் கதாபாத்திரத்தின் உள்ளார்ந்த மனவோட்டங்களை காட்சிப்படுத்துவது என்பது திரைக்கு உள்ளபடி ஒரு சவால்தான். ஆக, இத்தகைய சவால்களை எதிர்கொள்கிற விதத்தில் திரை தனக்கான மொழியை கூர்மைப்படுத்திக் கொள்கிறது என்கிறபோது இலக்கியம் திரைமொழியை மேம்படுத்த உதவுகிறது என்றுதான் சொல்லவேண்டும். 

திரையின் காட்சிப்பூர்வமான கதை சொல்லலை, அதன் சாத்தியங்களை உள்ளபடி உள்வாங்கிக் கொண்ட ஒரு எழுத்தாளன் திரைக்கான பிரதியை, திரைக்கதையை, எழுத முடியும். திரைக்கதைப் பிரதியாக்கம் அவனது எழுத்தாற்றலுக்கு விடுக்கும் சவால்களை அவன் எதிர்கொள்ளும் விதத்தில் அவனது எழுத்தாற்றலும் மேம்படவே செய்கிறது. இலக்கியத்தில் கதை, கவிதை, கட்டுரை என்கிற வடிவங்களை உட்கிரகித்துக்கொண்டது போலவே, திரைக்கதை வடிவத்தையும் அவனால் கிரகித்துக்கொள்ள முடியும்தான். தேவை விருப்புணருவுடன் கூடிய முயற்சி ! 

எழுத்தாளர்களுக்கு திரைக்கதை எழுத்துப் பயிற்சி போலவே, திரைக்கலைஞர்களுக்கு வாசிப்பின் வாயிலாக, கதையின் சூழலை, கதாபாத்திரங்களை உட்கிரகித்து கொள்ளுதலின் வாயிலாக,  யதார்த்தத்தையும்,  கற்பனாத்திறனையும் தன்னுள் விரித்துக் கொள்வதற்கான பயிற்சியும் கிடைக்கிறது. தனது நேரடி அனுபவத்திற்கு உட்படாத சூழல் சார்ந்த மனிதர்களின் வாழ்வையும் வாசித்தலின் வாயிலாக அவன் தன் அனுபவமாக்கிக்கொள்ள முடியும். 

பாத்திரத்திற்கேற்ற நடிகனை இயக்குநர் தேர்வு செய்கிறார் என்றாலும் கதாபாத்திரங்களை தன் உடல் மொழியால் உயிர்ப்பிக்கும் ஒரு நடிகன் இலக்கிய அல்லது திரைப்பிரதியை எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறான் என்பதும் கவனப்படுத்தலுக்கு ஆட்படுத்தப்பட வேண்டியுள்ளது. சமயங்களில் பிரதியின் தன்மை நடிப்புப் பாங்கைத் தீர்மானித்து விடும். இலக்கிய வழக்கு மிகை  நடிப்பு முறையை நிர்ப்பந்தித்துவிடக்கூடும். ஆக, இலக்கியம் திரையை, திரை நடிப்பை தாக்கத்திற்குள்ளாக்குகிறது என்பதும் கூட உண்மைதான் ! 

உள்ளபடி திரைக்கும் இலக்கியத்திற்குமான உரையாடலைப் போலவே, வாய்மொழி மரபிற்கும் இவைகளுக்கும், நாடகத்திற்கும் இவைகளுக்கும் என்பது போல பல்வேறு தளங்களும் கவனத்திற்குட்படுத்த வேண்டியுள்ளது. சாகித்திய அகாதெமியின் கருத்தரங்கில் பங்கேற்ற எழுத்தாளர்கள் ( நீல பத்மநாபன், பொன்னீலன், எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ஜி. திலகவதி )  , நாடக இலக்கியப் பிரதியாளர்கள் ( ந. முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி, மு. இராமசாமி ) , திரைக் கலைஞர்கள் ( பாலு மகேந்திரா, பாக்கியராஜ், ரா.சி.சக்தி, ஞான ராஜசேகரன், சசி, கௌதமன், லெனின், அம்ஷன் குமார், தியோடர் பாஸ்கரன், சிவக்குமார், அபிஷேக் )  அவரவர் அனுபவங்களிலிருந்து பெற்ற கருத்துக்களை முன்வைத்த பாங்கும், நிகழ்வை ஒருங்கிணைத்தோரின் ( மாலன், கே. ஸ்ரீநிவாசராவ், கிருஷ்ணசாமி நாச்சிமுத்து, இரா. காமராசு, அ.சு. இளங்கோவன், சம்பத் )  நேரிய உழைப்பும் வணக்கத்திற்குரியது. இது போன்ற கருத்தரங்கங்கள் கல்லூரி அளவில், திரைப்பட இயக்கங்களால் அந்தந்தப் பகுதிகளில், அரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தகக் கழகங்களால் மாவட்டம் தோறும் இவ்வாண்டு முழுவதும் நிகழ்த்தப்பட வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் மீது ஆகப்பெரும் தாக்கத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் திரை குறித்த விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களுக்கும் அது கொண்டுசெல்ல ஏதுவாயிருக்கும். செய்வோமா ..? செய்வோம் ! வாருங்கள் ! ஒரு துளியாய்க் கலந்து அலையாய் எழுவோம் !!

( ‘தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம்‘ என்கிற தலைப்பில் சாகித்திய அகாதெமி நிகழ்த்திய இரண்டு நாள் கருத்தரங்கில் அரங்கேறிய கருத்துக்களையும் அவை என்னுள் கிளர்த்திய அனுபவங்களையும் தொகுத்துக்கொண்டதின் சிறு பதிவு இது ! ).

நன்றி : நிழல் 
 
                                  

Friday, November 1, 2013

பேசும் படம்






சினிமாவிற்கான தோற்றுவாய் காட்சிகளைப் பதிவு செய்யும் புகைப்படக்கலையே ! ஆக, புகைப்படக்கலையின் பிறப்பு குறித்து முதலில் பார்ப்போம். ஒரு இருண்ட அறைக்குள் சாவித்துவாரம் வழியே ஊடுறுவிய ஒளிக்கற்றையோடு சேர்ந்து வெளியே இருக்கும் காட்சியானது தலைகீழாகவும் மங்கலாகவும் சுவற்றில் படிவது காண கருக்கொண்டது புகைப்படக்கலை ! அவ்வாறு சுவற்றில் படியும் காட்சி பிம்பத்தை தெளிவான பதிவாக எடுத்துவைப்பது எப்படி என்கிற ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டு, லென்ஸ் மற்றும் புகைப்படச் சுருள் என்கிறவரை படிப்படியாகக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. புகைப்படக் கருவி கையடக்கமாகியது ! புகைப்படக்கலை உருக்கொண்டது !

கினிமா என்ற கிரேக்கச் சொல்லே ஆங்கிலத்தில் சினிமா என்றானது. அசைவது, நகர்வது என்று அதற்குப் பொருள்.  பீட்டர் மார்க் ரோஜெட் என்ற விஞ்ஞானி 1824-ல் வெளியிட்ட , "கண்களில் உள்ள விழித்திரையானது தன் மீது விழும் காட்சிப் பிம்பத்தை, உண்மை நேரத்தை விட 1/16 நொடி அதிகமாகத் தக்க வைத்துக் கொள்கிறது. அந்த நேரத்துக்குள் விழித்திரையில் விழும் மற்றொரு பிம்பம் அசையும் தன்மையைப் பெறுகிறது."  என்கிற ‘பார்வை நிலைப்புத் தன்மைக் கொள்கை’யே சினிமா-வின் வளர்ச்சிக்கு அடிப்படை ! ஒரு வினாடிக்கு 16 படங்கள்  என்கிற வீதத்தில் அடுத்து அடுத்து வைக்க அசையும் படம் உருவானது.  பயாஸ்கோப், மாஜிக் லேண்டர்ன், கைனடாஸ்கோப், வைடாஸ்கோப்பு, ப்ரொஜெக்டர் வழி பிம்பங்கள் அசையும் பிம்பங்களாயின. ஒரு நிமிட துண்டு படங்கள் பல எடுக்கப்பட்டன. ரயில் வண்டி ஸ்டேஷனை நோக்கி வருவது போன்ற காட்சி திரையிடப்பட்டபோது, மக்கள் இரயில் தங்கள் மீது மோதவருவதாக எண்ணி பயந்து ஓடினர். நொடிக்கு 16 பிம்பங்கள் என்கிற வீதத்தில் இருந்தபோது பாத்திரங்களின் செயல்கள் இயல்பு மீறியதாக இருந்தது. படிப்படியாக அண்மைக் காட்சி, தூரக்காட்சி,  காட்சிக் கோணம், படத்தொகுப்பு என்று சினிமாவின் நுட்பம் கூடியது. காட்சி மொழி வித்து கொண்டது. 

காட்சிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு மவ்னப் படங்களாக சினிமா காட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் நாடகம் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுதான் இருந்தது. பிற்பாடு சினிமா பேசத் துவங்க நிலைமை தலைகீழாகியது. வினாடிக்கு 24 பிம்பங்களென கதாபாத்திரங்களின் செயல்கள் இயல்புத் தன்மை பெற, கறுப்பு வெள்ளையிலிருந்து வண்ணப்படமாக சினிமா வடிவெடுக்க அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது சினிமா ! திரைமொழி வேர்பிடித்து விருட்சமாய்க் கிளைத்துத் தளைத்தது !

லூமியர் சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட  அகஸ்டி மற்றும் லூயிஸ் லூமியர் இருவரும் முதல் நகரும் படம் எடுத்தனர். வெளியான ஆண்டு 1895. 17 அடி நீளமான பிலிம்மில் இவர்களது படம் ஓடும் நேரம் 50 வினாடிகள் ! தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வெளியே வருவதை படம்பிடித்துக் காட்டினார்கள். உலகின் முதல் வீடியோ கேமராவை கண்டுபிடித்தவர்களும் இவர்களே. ஆண்டு அதே 1895 ! இவர்கள் கண்டுபிடித்த சினிமட்டோகிராப் என்னும் கேமராவைக் கொண்டே இவர்களது முதல் படத்தை எடுத்துள்ளனர். அந்தப் படத்தின் பெயர், La Sortie des usines Lumière à Lyon அல்லது ஆங்கிலத்தில் ‘Workers Leaving The Lumiere Factory !

லூமியர் சகோதரர்கள் படம் எடுக்க ஆரம்பித்தபோதே அவற்றை இங்கு நமது மும்பையிலும் திரையிட்டுக் காட்ட ஆரம்பித்திருந்தனர். ஆக, இந்தியாவில் திரைப்படம் அறிமுகமாகியது 1895 ஆண்டில் ! இந்தியாவின் முதலாவது மெளனப்படத்தை எடுத்தவர் தாதா சாகிப் பால்கே. படம் ராஜா ஹரிச்சந்திரா ! வெளியான ஆண்டு 1913. அதனால்தான் நடப்பு ஆண்டை ( 2013 ) இந்திய சினிமாவின் நூற்றாண்டாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்தியாவின் முதல் படத்தயாரிப்பாளர், தியேட்டர் ஓனர் ஜாம்ஷெட்ஜி பிரேம்ஜி மதன். இந்தியாவின் முதல் பேசும் படம் வெளியான ஆண்டு 1931. படம் ஆலம் ஆரா ! இயக்கியவர் அர்தேஷிர் இரானி. இதே ஆண்டு தமிழகத்திற்கும் பேசும் படம் வந்துவிட்ட்து குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் முதல் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. R. நடராஜ முதலியார். இவரது முதல் படம் “கீசக வதம்”, ஆண்டு 1916. தென்னிந்தியாவின் முதல் மெளனப் படம் இதுதான். முதல் பேசும் படம் தமிழகத்திற்கு வந்த ஆண்டு முன்னரே கூறியதுபோல 1931. படம் காளிதாஸ் ! இயக்கியவர் H.M.ரெட்டி. அப்படத்தின் கதாபாத்திரங்கள் பல மொழிகளில் பேசின. முழுக்கவும் தமிழ் பேசிய படம்/ பாடிய படம் 1933 -ஆம் ஆண்டு வெளியான கலவா ! அர்ஜுனனின் பெருமையைச் சொன்ன இந்தப் படத்தை இயக்கியவர், P.P.ரங்காச்சாரி. 1936 -ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் பெண் இயக்குனரான T.P.ராஜலக்ஷ்மியின் மிஸ்.கமலா வெளியானது.

தமிழ் சினிமாவின் துவக்கத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாயிருந்த புராண, இதிகாச, சமூகக் கதைகளே அதிகம் எடுக்கப்பட்டன. அத்தோடு சுதந்திரப் போராட்டத்தை முன்வைத்த படங்களும் வெளிவந்தன. கதைகளை நாடகச் சூழலிருந்து உட்கிரகித்துக்கொண்டது போலவே, நடிகர்களாக மக்கள் மத்தியில் பிரபலமாயிருந்த நாடக நடிகர்களையே தமிழ் சினிமா அப்போது உட்கொண்டிருந்தது. கூத்து, நாடகப் பாணியிலேயே பாடல்கள் பெரிதும் இடம்பெற்றிருந்தன. நாயகர்களின் பெயரோடு “பாகவதர்”  இணைந்து இருப்பது வியாபார உத்தியாகயிருந்தது.

பாடல் விடுத்து, வசனத்தில் தமிழ் சினிமா கவனம் காட்டத் தொடங்கியது 1945 – 1950களில் தான். வசன காலகட்டத்தில் திராவிட மற்றும் பொதுவுடைமைக் கருத்துக்கள் பற்றி பேசும் படங்கள் நிறைய வெளிவந்தன.  பாடலின் இடத்தை வசனம் பிடித்துக்கொண்டது. பக்கம் பக்கமாக வசனங்கள் பேசப்பட்டன. அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி போன்றோர் தமது அரசியல் பிரச்சாரத்திற்கான கருவியாக தமிழ் சினிமாவைக் கைக்கொண்டனர். உலக அரங்கில் சினிமாவின் காட்சி மொழியின் நுட்பம் கூடிக்கொண்டிருந்த வேளையில், தமிழ்ச் சூழலில் தமிழ் சினிமா நாடகார்த்தமாகவே வீறுநடை போட்டது. யதார்த்தம் என்பதைவிட மிகைத்தன்மையை சகல கலை இலக்கியத் தளங்களிலும் மரபாகக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம் சினிமாவை மரபின் தொடர்ச்சியில் வைத்தே கண்டு களித்துக் கொண்டாடிவந்துள்ளமை உற்று நோக்கத்தக்கது ! நாடகக் கொட்டகைகளும் அரிசி ஆலைகளும் திரை அரங்குகளாக மக்கள் பார்த்தது திரைநாடகங்களாக இருந்தது உள்ளபடி புரிதலுக்குரியதுதான் !

-சுரேஷ்வரன்-
( கூத்துப்பட்டறை )

நன்றி : மலைகள்.காம்