உன்னின் மவ்னத்திற்கான அர்த்தத்தைத் தேடிப்போய்
என்னின் ஆழத்தில் கிடந்த அந்த யாழினை
கண்டுகொண்டிருக்கிறேன் ஊர்ஸுலா.
நரம்புகள் ஏதுமற்ற அக்கருவியிலிருந்து
காட்டுப்பூவின் கந்தம்போல் சித்தம் மயக்கும்
இசையொன்று
ஊறிப்பெருகியபடியே இருக்கிறது.
யாரும் தீண்டியிரா என்தனிமைக்குள் நிரம்புமதில்
பெருமீனென நீந்தித் திளைக்கிறேன்.
யாழின் புதிர்த்தன்மை குறித்து
மேலும் பகிரும் துணிவற்றிருக்கிறேன்...
ஆயினும் ஊர்ஸுலா,
உன்னிடம் சொல்லித்தானாகவேண்டும் :
நீயற்ற கணங்களில்
வெட்டியெறியப்பட்ட ஒரு மரத்துண்டம்போல
மூச்சற்றுக் கிடக்கிறதது.

No comments:
Post a Comment